உண்மையில், எல்லாரையும்விட
அவர்கள்
பொறுமையானவர்கள்.
அதனால்தான்
பனிமலை பற்றியெரியும்போது
நிதானமாக அவர்களால்
விவாதிக்கமுடிகிறது.
நம் கொந்தளிப்பைப் பார்த்துக்
கைகொட்டிச் சிரிக்கமுடிகிறது.
மக்களாட்சி பற்றி
சகிப்புத்தன்மை பற்றி
வகுப்பெடுக்கமுடிகிறது.
கல்லெறியும்
கல்லெறிவதாய்ச் சொல்லப்படும்
சிறுவர்களின்
கண்களைக் குருடாக்குவதை
இரும்புக்கரம் கொண்டு அடக்குதல் என்று
விளக்கமுடிகிறது.
அன்னையர் தம் மக்களுடன்
ஒரே ஒரு நிமிடம்
ஒற்றைத் தொலைபேசியில் உரையாட
அனுமதித்து மேற்பார்வையிடுவதை
மென்மையான அடக்குமுறையென்று
மெச்சமுடிகிறது.
அதனால்தான்
ஒவ்வொருமுறையும்
கோட்சேவால் காந்தியைக்
கைநடுக்கமில்லாமல்
சுடமுடிகிறது.