(முகநூலில் 13 ஆகஸ்டு அன்று பதிந்தது.)
இம்மாதம் தமிழினி இணைய இதழில் காவல்துறை, ராணுவ அத்துமீறல்கள் குறித்து, சமகாலத்தில் கவனித்த நிகழ்வுகளையும் இலக்கியப் பதிவுகளையும் முன்வைத்து, ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.
கட்டுரையை அனுப்பிய பிறகு தமிழில் இரண்டு முக்கியமான சிறுகதைகள் படிக்க நேர்ந்தது:
எம்.கோபாலகிருஷ்ணனின் சீசர்,
பாவண்ணனின் கண்காணிப்புக் கோபுரம்.
சீசர் கதையில் காவல்துறையினர் தமது நாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சியைச் சோதிப்பதற்காகவோ, மேலும் பயிற்சி அளிப்பதற்காகவோ, சுற்றி இருக்கும் மக்கள் மீது ஏவி வேடிக்கை பார்க்கின்றனர். அவர்கள் பாதிக்கப்படும் போது, ஈரமோ குற்றவுணர்வோ துளியுமின்றிக் கடந்து செல்கின்றனர்.
கண்காணிப்புக் கோபுரம் கதை, ஓர் எளிமையான நேர்மையான ராணுவ வீரன் சக வீரர்களாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டு, ‘மானம் மரியாத கோபம் ரோஷம் எல்லாத்தயும் காத்துல பறக்க உட்டாதான் ராணுவத்துல சிப்பாயா வாழமுடியும்ங்கறது இப்ப நல்லாவே புரிஞ்சிட்டுது’ என்கிற நிலைக்குத் தள்ளப்படுவதைப் பேசுகிறது.
இரண்டு கதைகளும் இந்த அமைப்புகளிலுள்ள தனிமனிதர்களின் சிக்கல்களை மட்டும் பேசாமல், அமைப்பு ரீதியாகவே இவை எப்படி மனிதாபிமானத்தைத் துடைத்தெடுத்து வன்முறைக்கும் அத்துமீறலுக்கும் வித்திடுகின்றன என்பதை மையமாகக் கொண்டுள்ளதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.