வாணியோட கன்னுக்குட்டி பொண்ணா இருந்தா எழில்னு பேர் வைக்கப் போறேன்.
சரிடா.
ஆணா இருந்தா எழில்னு வர்றமாதிரி என்ன பேர் வைக்கலாம்?
எழில்ங்கிறதே பொதுப்பேருதான். காளையா இருந்தாலும் வைக்கலாம். பசுவா இருந்தாலும் வைக்கலாம்.
இல்லப்பா, அது எப்படிப்பா?
‘ஆமா, இவதான் எல்லாருக்கும் பேரு வைச்ச மகராசி. எத்தன பேருக்கு பேர் வைச்சுருக்க நீ?’ என்று செல்லமாக அதட்டினாள் அம்மா.
‘காரி, மதுரா, வாணி, நிலா, ராசு, கல்லு, குட்டா,…’ என்று மூச்சுவிடாமல் அடுக்கினாள். நாய்,ஆடு, மாடுகளுக்கு அவள் வைத்த பெயர்கள்.
பொம்மைகளுக்கு வைத்த பெயர்களை மறந்துவிட்டாள். ‘தாரா, மேகி, ஜாய்,…’ கைகாலாட்டும் புதிய மர பொம்மைக்கு டின்டின் என்று பெயரிடலாமா என்று யோசித்துவிட்டு, மீசை, தொப்பி இருப்பதால் கேல்குலஸ் என்ற பெயரை முடிவுசெய்திருக்கிறாள்.
ஒரு பார்பி பொம்மைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு காந்தாரி என்று பெயர் வைத்திருந்தாள்.
காந்தார மன்னன் சுபலனுக்குப் பின்னர் காந்தாரி என்ற பெயரைச் சூட்டியவர்கள் யாரேனும் உண்டா அறிஞர் பெருமக்களே?