குழந்தைகளுக்கான புத்தகங்கள்

2016ல் படித்தவை என்று நானும் நண்பர்களும் பெரிய பட்டியல்கள் போடுவததைப் பார்த்துவிட்டு மகிழ்மலர், தானும் ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். மகிழின் சமவயதுக் குழந்தைகளுக்கும் இப்பட்டியல் பயன்படும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1. கு. அழகிரிசாமி சிறுகதைகள்
– அன்பளிப்பு
– இருவர் கண்ட ஒரே கனவு
– சாப்பிட்ட கடன்
– ராஜா வந்திருக்கிறார்

[இக்கதைகள் எவையுமே சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை என்று சொல்லமுடியாது. ஆனால், சிறுவர்களும் படிக்கக்கூடியவை. சாப்பிட்ட கடன் கதையின் முதல் பாதி அவளுக்குச் சற்றே சிரமமாக இருந்தது. அதன் பின் பாதியையும், மற்ற மூன்று கதைகளையும் மிகவும் ரசித்துப்படித்தாள்.]

2. குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்: அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்)
[குக்கூ நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்தது. முந்தைய ஆண்டுகளில் இதை நான் அவளோடு சேர்ந்து வாசித்தபோது, அவ்வளவு ஈர்ப்பாக இல்லை; இவ்வாண்டு, அவளே படிக்கும்போது, ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது; நான் ரசித்த பல இடங்களை அவளாலும் ரசிக்க முடிந்தது – உதாரணமாக, ஒரு வேற்றுக் கிரகத்து வியாபாரி விண்மீன்களை எண்ணிக்கொண்டு, அவற்றைத் தனது சொத்து என்று உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் பகுதி]

3. பனி மனிதன் (நாவல் – ஜெயமோகன்)
[நண்பர் செந்தில் கொடுத்தது. முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு, அவளுக்குப் பிடிக்குமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவளுக்குத் தந்தேன். மிக சுவாரசியமாகவும் வேகமாகவும் படித்து முடித்தாள். நாவலுக்கு இடையிடையே உள்ள பெட்டிச் செய்திகளைப் படிப்பதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், அவற்றைப் படிப்பதற்கான ஒரு பிடி கிடைத்தபின், ‘எப்படிப்பா இவருக்கு இதெல்லாம் தெரியும்,’ என்று வியந்துகொண்டே படித்தாள்.]

4. வான்வெளிக் கொள்ளையர் (முத்து காமிக்ஸ்)
[இதுவும் நண்பர் செந்தில் கொடுத்தது. ‘லாரன்ஸ் தப்பிச்சிடுவாரா?’ என்று அடிக்கடி கேட்டபடியே விறுவிறுப்பாகப் படித்தாள்.]

இச்சிறு பட்டியலில் சற்றே பெரிய குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் என்று அவள் கருதுபவை, அதிலும் அப்பாஅம்மாவின் துணையின்றிப் படித்தவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்டிக்குட்டி படக்கதைகள் இல்லை…பாரதி புத்தகாலயம், NBT பதிப்பித்த குட்டி நூல்களில் அநேகமாக அனைத்தையும் அவளுக்காகவும் எங்கள் பயிலகத்துக்காகவும் வாங்கியுள்ளோம்; பலவற்றை அவள் படித்தும்விட்டாள். சுப்பாண்டி கதைகள் (தொகுதி 1)தான் அவளாகப் படித்த முதல் பெரிய புத்தகம். அதனை அதற்குப்பிறகும் அவ்வப்போது மறுவாசிப்பு செய்கிறாள்.

எங்கள் பயிலகத்து மாணவர்கள் நிறைய வண்ணப்படங்களுடன் கூடிய சிறிய குழந்தைப் புத்தகங்களைப் புரட்டுவதையே விரும்புகின்றனர். தெனாலிராமன் எல்லா வயதினரிடமும் மிகப் பிரபலம். பெரிய வயது(12-15) மாணவர்கள் அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் படிக்கவேண்டும் என்று அவ்வப்போது எடுக்கின்றனர்…இதுவரை யாரும் அதிக பக்கங்களைக் கடக்கவில்லை. DK’s Visual Dictionary அவர்கள் அடிக்கடி நாடும் இன்னொரு புத்தகம்; பெரும்பாலும் புரியாமலே படம்பார்ப்பார்கள்; சில சமயம் விளக்கச்சொல்லிக் கேட்பார்கள். தமிழில் அது போல் கிடைத்தால், பிரமாதமாக இருக்கும்.

இந்த மாணவர்கள் மத்தியில்தான் தோழர் இரா.முருகவேளின் முகிலினி வெளியிடப்பட்டது. ‘நம்ம முகிலினி’ என்று ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அப்புத்தகத்தை அவர்கள் பார்ப்பார்கள். ஒரே ஒருவன் மட்டும், அதன் முதல் அத்தியாத்தைப் படித்துவிட்டு, ‘அண்ணா சூப்பர்’ என்றான். விரைவில் எவரேனும் முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கும்போது, எழுத்தாளர் யார் என்பதைவிட, அந்தப் புத்தகம் எந்தச் சூழலில் எவர் கொடுத்துக் கிடைத்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது.

நாங்கள் செல்லும் இரண்டு துவக்கப்பள்ளிகளிலும், பாவண்ணனின் ‘யானை சவாரி’ குழந்தைப் பாடல்களுக்கு (பாரதி புத்தகாலயம்) நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குழந்தைகள் விரும்பிப்பாடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட பல கிளாசிக்குகள் சிறுவர்களுக்கான சுருக்கப்பட்ட வடிவங்களில் பிரபலமாக உள்ளன. குழந்தைகளுக்காகவென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதைகளில் கிடைக்காத ஒரு பரந்த அனுபவம் இக்கதைகளில் கிடைப்பதுண்டு. (குழந்தைக் கதைகளில் வேறுவகையான அனுபவம் கிடைக்கும்…அதையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவற்றிற்கான தேவையும் உள்ளது.) தமிழில் அப்படியொரு நிலை இல்லை. கு.அழகிரிசாமியின் இச்சிறுகதைகளைப் போன்றவை இந்த இடைவெளியை நிரப்பக்கூடும். நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையையும் மகிழுக்குப் படித்துக் காண்பித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதைகள் பலவற்றை அவளோடு படித்தது நான் எதிர்பாராத ஒரு புது அனுபவமாக அமைந்தது; எனக்கும் அவரது கவிதைகளுக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது. அதை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது பரவசமாகிவிட்டார்.

சென்ற ஆண்டு, மகிழ் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இரு முறைகளில், ஒரு தடவை பாரதியின் வசன கவிதைகளையும், அடுத்த முறை கல்கியின் பார்த்திபன் கனவில் கணிசமான பகுதியையும் அவளுக்கு உரக்கப் படித்தேன். அதனால் உடல்நிலை சரியானது என்றெல்லாம் கூறமாட்டேன்; ஆனால் மோசமாகவில்லை என்பதற்கு உத்திரவாதம் தரமுடியும். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துக்காட்டும்படி கேட்டிருக்கிறாள். பார்த்திபன் கனவைத் தானே படித்து முடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறாள். படித்துவிட்டால், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று பல மாதங்களுக்குக் கல்கியிலிருந்தே பெரிய விருந்து வைத்துவிடலாம்.

Roald Dahl எழுதிய The Magic Finger மற்றும் The Umbrella Man, சேக்ஸ்பியரின் The Merchant of Venice, The Tempest (abridged versions) அவளுக்குப் படித்துக்காண்பித்திருக்கிறேன்; விரும்பிக் கேட்டாள். The Wizard of Oz, Twenty thousand leagues under the Sea ஆகியவற்றை அவளே படிக்க முனைகிறாள். ஏனோ, அவை பல மாதங்களாகப் பாதியிலேயே நிற்கின்றன. (இவ்வரிசையில் பல புத்தகங்களை நண்பர் தியாகு தனது நூலகத்திலிருந்து எங்கள் பயிலகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பெரிய பொக்கிஷமாக எங்கள் குழந்தைகளுக்காக அவை காத்துக்கொண்டிருக்கின்றன.)

தற்போது, உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி (தமிழினியிலிருந்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அன்பளிப்பு), மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள காட்டிலே கதைகள் ஆகிய சிறுவர் கதைத்தொகுப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறாள்.

(நண்பர்களும் தங்களது பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டால், சிறுவர்களுக்கான ஒரு விரிவான பட்டியல் உருவாகலாம்.)


இதையும் இங்கு சொல்லவேண்டும்: மகிழ், தோட்டத்தில் விளையாடியபடி குதூகலமாகக் கேட்டு, ஒரு சில பத்திகளை மனனம் செய்துகொண்ட ஆங்கிலக் கவிதை, வேர்ட்ஸ்வர்த்தின், ‘The Tables Turned’:

Up! up! my Friend, and quit your books;
Or surely you’ll grow double:



Books! ’tis a dull and endless strife:
Come, hear the woodland linnet,
How sweet his music! on my life,
There’s more of wisdom in it.

அம்மாவோடு சேர்ந்து பறவைகளையும் தொடர்ந்து பார்க்கிறாள் என்பது கூடுதல் ஆறுதல்.

பின்னூட்டமொன்றை இடுக