பேயோன் ட்விட்டரில் தொடர்ந்து பல சிறப்பான ஓவியர்களின் ஓவியங்களைப் பகிர்ந்து வருகிறார். என்னைக் கவர்ந்த சில ஓவியங்களை எனது மடிகணினியில் சேமித்து வைத்து, இந்த வாரம் எங்கள் பயிலக்கத்தில் குழந்தைகளுக்குக் காண்பித்தேன்.
முந்தைய நாள் வகுப்பு முடிந்து திரும்பிச்செல்கையில், தனது தம்பியையும், இன்னொரு சிறுவனையும் சாலையில் அடித்துவிட்ட கதையைப் பற்றி நான் கேட்டதால், அதுவரை என் மீது கோபித்துக் கொண்டு பாரா முகத்துடன் அமர்ந்திருந்த ஹசீன், முதல் ஆளாக அந்த ஓவியங்களைப் பார்க்க வந்தான். (என் மகள், ‘அப்பா லேப்டாப்ல ஏதாவது படம் போடறேன்னு சொன்னா, ஹசீனண்ணா சரியாயிடுவாங்க,’ என்று அறிவுரை வழங்கியிருந்தாள்.)
பெரும்பாலான ஓவியங்களைப் பார்த்து முடித்த பின்னர், அவனே ஓர் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து (Gabriele Münter “On the Seine”, 1930) வரையத் தொடங்கினான். சஹானாவும், தமிழ்ச்செல்வியும் அவனோடு சேர்ந்து கொண்டு அதே ஓவியத்தை தத்தம் பாணிகளில் வரையத் தொடங்கினர். வண்ணம் தீட்ட, எல்லாரையும் தனது குறும்புகளால் சீண்டிக்கொண்டிருந்த ஜுமானா தனது க்ரையான்களைக் கொடுத்தாள்.
‘அக்கா, பெங்களூரு பிஸ்கட் இருக்காக்கா,’ என்று ஜெய் கேட்க, (அவை என்றோ தீர்ந்து விட்டதால்) வேறு பிஸ்கட்டுகளைப் பகிர்ந்தளித்தோம்.
பயிலகத்தில் புதுக்களை கட்டியது. புகைப்படங்கள் எடுக்கத்தொடங்கினோம். ஒரு குதூகல உணர்வு எல்லாரையும் தொற்றிக்கொண்டது. எதிர்பாராமல் ஒரு கொண்டாட்டம் அரங்கேறியது.