தியான வனம்

சென்ற வாரம் முற்றிலும் புதியதோர் அனுபவத்தைக் கொணர்ந்து தந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணிசெய்கின்றவர்களும், கடந்த சில ஆண்டுகளில் எங்கள் இனிய குடும்ப நண்பர்களாகவும் ஆகிவிட்ட ராஜா-கல்பனா தம்பதியினர், பள்ளி மாணவர்களுக்காக ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி முகாமுக்காகச் சென்றிருந்தோம். இம்முறை, கல்லூரி வளாகத்தில் அல்லாமல், அருகிலிருந்த தியான வனம் என்கிற ஆசிரமத்தில் நிகழ்ச்சி நடந்தது.

தியான வனத்தை நடத்திவருபவர் கோர்கோ மோசஸ் – காவி உடை அணிந்த ஒரு ஜெசூயிட் பாதிரியார். அவ்வப்போது பயிற்சிக்காக வருகின்ற பாதிரியார்களின் துணையோடும், பெரும்பாலும் தனியாகவும் ஆறரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வருகிறார். நல்ல மழை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், அருகிலிருந்த அணையில் நீர் முழுவதுமாக வற்றிவிட்ட போதும், இன்னும் நிறைய பசுமை அங்கு மிச்சமிருந்தது. நாங்கள் சென்று சேர்ந்த காலைப் பொழுதில் பெய்த சிறு மழையின் கருணையில் பசுமை மெருகேறியிருந்தது.

ஃபாதர் கோர்கோ மிக எளிய ஒரு துறவு வாழ்வினை வாழ்ந்து வருகிறார். அவரது படுக்கை அறை இதுவரை நான் எங்கும் கண்டிராத ஒரு கோலத்தைக் கொண்டிருந்தது. பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள அந்த அறையில், நான்கு அடிக்குக்கும்  உயரமாக இருந்த ஒரு மரக்கட்டிலும், அதன் மீது ஒரு மெல்லிய மெத்தை விரிப்பும் இருந்தன. அறையின் ஒரு மூலையில் சில தடுப்பகளால் அமைக்கப்பட்ட ஒரு கழிவறை. இவற்றைத் தவிர அந்த அறையில் எந்த ஒரு பொருளும் இல்லை.

‘பொருட்களே இல்லாத ஒரு அறையை இப்போதுதான் பார்க்கிறேன்,’ என்றேன்.
‘எனது சில பொருட்கள் என் அலுவலக அறையில் இருக்கின்றன,’ என்றார்.

நான்கு சிறுமிகள் குத்துவிளக்கு ஏற்ற, ‘ஒளிவளர் விளக்கே’ என்ற திருமுறைப் பாடலை மகிழ்மலர் பாட நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி நடந்த பெரிய அரங்கில், தலாய் லாமா, விவேகானந்தர், ஃபிரான்சிஸ் அஸிசி, ரூமி, மகாவீரர் என்று பல சமயத் தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரைப் பற்றியும் சில குறிப்புகளைக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டார். பத்மாசனம் போட்டிருந்த ஒரு சித்தரின் ரூபத்தில் யேசுவின் படம். யேசுவை ஒரு சித்தராகத்தான் பார்ப்பதாகக் கூறினார்.

வங்காளத்தில் சுவாமி சதானந்த கிரி என்பவரிடம் பல ஆண்டுகள் யோகப்பயிற்சி பெற்றிருக்கிறார். சுவாமி சரணானந்தா என்ற பெயரையும் இந்தப் பாதிரியார் பூண்டிருக்கிறார். யேசு நாம செபம் என்ற புத்தகத்தை வங்காள மொழியில் எழுதி, ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

தியான அறை என்று தனியே ஓர் அறை இருந்தது. மிகவும் ரம்மியமான சூழலில், அமைதியின் மடியில் அமைந்துள்ள அந்த அறையின் வாயிலை நோக்கிய சுவரின் மையத்தில், 12 சமயங்களின் சின்னங்களை ஒருங்கே கொண்டுள்ள ஒரு படம் இடம்பெற்றிருந்தது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வாசகம் அதன் மேல் பிரதானமாக எழுதப்பட்டிருந்தது. படத்தின் நடுவில் தியானம் செய்யும் ஓர் உருவம்.

அனைத்துச் சமயங்களை நிறுவியவர்களும், ஆழ்ந்த தியானத்தின் மூலமாகவே ஞான நிலையை எய்தியதாகக் கூறினார்.

படத்தின் முன்னே கீதை, பைபிள், குரான் மூன்றும் விரித்து வைக்கப்பட்டுள்ளன. அறையின் புத்தக அடுக்கில், அந்த நூல்களின் பல பிரதிகள் இருந்தன.

முதல் நாள் மாலையில், 10-15 வயதுக்குள் இருந்த 30 குழந்தைகளும் ஒரு மணிநேரம் பக்திப்பாடல்கள், வினோபாவின் சர்வசமயப் பாடல், தியானம், பைபிலிலிருந்து அன்று நாங்கள் கண்ட சில குறள்களுக்கு இணையான சில பத்திகள் படிக்கப்படுவதைக் கேட்பது என்று அமைதியாகக் கழித்தனர். பாதிரியார் 12 சமயங்கள் குறித்தும் குழந்தைகளுக்குச் சுருக்கமாகக் கூறினார். புத்தரின் கதையைச் சொன்னார்.

மையப் படத்துக்கு தீபாராதனை செய்து தியானத்தை முடித்தார்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு, சில உடற்பயிற்சிகளுக்குப் பின்னர், மீண்டும் தியான அறையில் ஒரு மணி நேரம். இம்முறை பைபிலுக்குப் பதில், கீதையிலிருந்து சில பத்திகளைத் தேர்ந்தெடுத்துத் தந்து, என்னைப் படிக்கச் சொன்னார்.

அவர் சொன்ன புத்தர் கதையின் பல பகுதிகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தர்மானந்த கோஸம்பி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினேன். ‘ஆம், அவை புராணங்கள் தான்; எல்லா ஞானிகள் குறித்தும் வெகுசில ஆண்டுகளில் புராணங்கள் எழுப்பப்படுகின்றன; அவர்களது தத்துவங்களை விளக்கவே அந்தப் புராணங்கள் பயன்படுகின்றன,’ என்றார்.

பயிற்சியின் இடையில் ஃபாதர் கோர்கோ கொரிய நடனம் கற்பித்தார். எல்லாரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நித்யா பறவைகள் குறித்து ஒரு வகுப்பெடுத்தபோது, மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறள் அடிப்படையிலான எங்களது வகுப்புகள் எளிமையானவையாக மாறின; ஒரு வகையில் அவசியமற்றும் போயின. கண்ணெதிரில் அறமும் அன்பும் நிறைந்த ஒரு எளிய மனிதர் இருக்கும்போது நாம் சொல்லிப் புரியவைப்பதற்கு என்ன இருக்கிறது.

கிராமத்துள் குழந்தைகளைக் குழுக்களாக அனுப்பி, ஒவ்வொரு குழுவும் 5 வீடுகளுக்கேனும் சென்று, மக்களோடு பழகி, உரையாடி வருமாறு செய்தார். ஒரு சில வீடுகளில் நாய்கள் குரைத்தன; ஓரிரு வீடுகளில் மனிதர்கள் குரைத்தனர்; பெரும்பாலும் உள்ளே அழைத்துவைத்து அளவளாவி, உண்ண ஏதேனும் கொடுத்து அனுப்பினர். வறட்சியால் வருமானமின்றி, வேலையின்றித் தவித்தாலும், மனங்களில் இன்னும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

தனக்குப் பின் தியான வனத்தை நடத்துவதற்கு எவரும் இதுவரை ஆர்வம் காட்டவோ பயிற்சி பெறவோ இல்லை என்கிற ஏக்கம் ஃபாதர் கோர்கோவுக்கு இருக்கிறது. இந்த இடம் பக்தர்களைக் (devotees) காட்டிலும் ஆன்மீகத் தேடலுடையவர்களுக்கானது(Seekers) என்று குறிப்பிட்டார். நிறுவன எதிர்ப்பு என்று பெரிதாக இல்லாவிட்டாலும், பெரிய ஆதரவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு தியான வகுப்புகள் மூலமாகவும், ஆசிரமத்தில் நடத்தப்படும் முகாம்களின் மூலமாகவும் நிர்வாகத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்கிறார். குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் முகாம்கள் நடத்துகிறார்.

‘ஒளிவளர் விளக்கே’ பாடலைப் பழகவேண்டும் என்று கூறி, மகிழ்மலரை மீண்டும் பாடச்சொல்லி பதிவு செய்துகொண்டார். வரிகளை எழுதிக்கொண்டார். ஆனந்த பைரவி ராகமாக இருக்கவேண்டும் என்றார். பாடல் இயற்றியது யார் என்பது அப்போது உறுதியாக நினைவில்லை (திருமாளிகைத் தேவர்). அவரது நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். திருமுறை முழுவதும் 20க்கும் மேற்பட்ட பாகங்களாக இருந்தது. மேக்ஸ் மியூலரின் கிழக்கத்திய சமயங்கள் குறித்த நூல்களின் முழுத்தொகுதியும் வைத்திருக்கிறார். தனது 18ம் வயது முதல், 38 ஆண்டுகள் வங்காளத்தில் இருந்துவிட்டதால், தமிழில் போதிய அளவு தேர்ச்சி பெற இயலவில்லை எனக் குறைபட்டார்.

இரண்டு நாட்களின் முடிவில் மாணவர்களிடம் நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு சிறுமி கூறினாள், ‘நான் ஃபாதர் கிட்ட இந்துக்கள் பைபிள் படிக்கலாமான்னு கேட்டேன். அவர் படிக்கலாம்னு சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சது.’

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: