‘அங்கிள், முன்னேற்றம் என்கிற பெயரில் புதுசா ஃப்ரிட்ஜ்.
ஆனா மலம் கழிப்பதோ வெளியில்.’
‘அங்கிள், வீட்டில் உட்கார புதுசா சோபா செட்.
ஆனா மலம் கழிக்க உட்காருவதோ தண்டவாளத்தில்’
‘அங்கிள், டை பேண்ட் ஷூ போட்டிருக்கீங்க…’
போன்ற பொன்மொழிகளோடு பல பெரிய பெரிய ஃப்ளெக்ஸ் பேனர்கள், ஸ்வட்ச் பாரத் நிமித்தம், கோவையில் தோன்றியுள்ளன. நீட்டிய கைகளும், ஏளனப் புன்னகையுமாய் கொழுகொழுப்பான சிவத்த சிறுவர்களின் படங்கள், நம்மை ஆள்பவர்களும் அவர்கள் நியமித்திருக்கும் விளம்பர நிறுவனங்களும் நம்மை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாய் நிற்கின்றன.
அங்கிள், எனக்குச் சில கேள்விகள்.
1. வெளியில் மலம் கழிக்கின்றவர்களில், புதிய ஃப்ரிட்ஜ் வாங்குகிற, சோபா செட் வாங்குகிற, டை ஷூ அணிகின்ற நபர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம் ஏதேனும் உண்டா?
2. வீட்டுக்குள் மலம் கழிப்பவர்களை, ‘ஃப்ரிட்ஜ் வாங்கவேண்டாம்; வெளியில் மலம் கழிப்பதை விட அதிகமாக ஃப்ரிட்ஜினால் பாரதத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்,’ என்று எப்போது அறிவுறுத்தப்போகிறீர்கள்?
3. இன்றைக்கு மலம், நாளைக்கு உரம். ஆனால், சுத்தமான பாரதத்தில், இந்த ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் என்னாகும்? எப்போது மக்கும்?
4. அங்கிள், சுற்றுச்சூழல் கிடக்கட்டும். ஃப்ரிட்ஜ் இருக்கிறதே என்று நாம் பதனப்படுத்தி உண்ணும் பல பெருநிறுவனத் தின்பண்டங்களாலும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் சோபா செட்களில் எந்நேரமும் மலத்துளைகள் அடைந்துகிடப்பதாலும், மலம் கழிப்பதற்கே பிரச்சனை என்கிறார்களே, உண்மையா? இது குறித்தெல்லாம் உங்கள் பேனர்கள் எப்போது பேசப் போகின்றன?
5. இந்தியச் சூழலுக்கு ஏற்ற கழிப்பறைகளிலும், மலத்தைச் சேகரித்து உரமாக்கிப் பயன்படுத்தும் முறைகளிலும் பலரும் பல சோதனை முயற்சிகள் செய்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் கவனித்தீர்களா? ஆம் எனில், உரமாகக்கூடிய மலத்தைக் கழிவாகக் கருதும் இந்த மனநிலையை நிலைநிறுத்தவா இத்தனை கோடிகள் செலவு செய்ய வேண்டும்?
6. ஃப்ரிட்ஜுக்கும், செருப்புக்கும், சோபா செட்டுக்கும், கழிப்பறை கட்டுவதற்கான இடத்துக்கும், மூன்று வேளைச் சோற்றுக்கும் வக்கற்று மலம் கழிக்க, இருள் கவியும் வேளையில் சாலையோரங்களில் அமர்ந்து, ஒவ்வொரு முறை பளீரென்ற ஹெட்லைட் வெளிச்சத்தைப் பீச்சிக்கொண்டு வாகனங்கள் வரும் போதும், கூசி எழுந்து முகம் மறைத்துத் திரும்பிக் கொள்ளும் எம் கிராமத்துப் பெண்கள், எள்ளிநகையாடும் உங்கள் விளம்பரங்களைப் படித்தால், நொந்து துணுக்குறக்கூடுமோ என்று ஒரு கணமேனும் எண்ணியதுண்டா?
நெத்தியடி கண்ணா !