புழுவையும் பறவையாக்கும்

நேற்று ‘எப்போ வருவாரோ’ நிகழ்ச்சியில் ஆண்டாள் பற்றிய உரை. தாமல் ராமகிருஷ்ணன். இதற்கு முன் அவர் பேசியதை வீட்டில் யாரும் கேட்டதில்லை. அழைத்துச்செல்லச்சொல்லி என்னைக் கேட்டால் பிலுக்குவானே என்று அப்பா முறிந்த கையைப் பிசைய முடியாமல் இரண்டு நாட்களாய்த் தவித்துக்கொண்டிருந்தார். சரி ஆண்டாள் ஆயிற்றே என்று பெற்றோர், மனைவி மகளுடன் நானும் ஆஜராகிவிட்டேன். தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே எப்போ முடிப்பாரோ என்ற கவலை கவிந்தது. சுற்றியிருந்தவர்களின் லயித்த சிரிப்பு என் கவலையை இரட்டிப்பாக்கியது. இதே கூட்டத்தில் ஜெயமோகன் எப்படிப் பேரூரையாற்றப்போகிறாரோ என்று கவலை பேரருவியானது. இந்த மாதிரியான இக்கட்டுகளைச் சமாளிக்கத்தானே உடன் மகளை அழைத்துச்செல்கிறோம். அவள் நெளிந்துகொண்டிருப்பதைக் கண்டு புதுக்கரிசனம் பொங்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பாதியில் விட்டுவிட்டு, மகிழ்மலரோடு விளையாடுவதற்காக வெளியேறினேன்.

அவள் கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வீடுதிரும்பும் பெண்ணாம். நான் அவ்வளவாக முடிநரைக்காத அப்பா. அவள் வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதால், தூக்கியணைத்துக் கொஞ்ச முடியவில்லையே என்று என்னைப் பீடித்த துக்கத்தைப் பகிர்ந்துகொண்டேன்; அவள் கைகளை மென்மையாகப் பற்றியவாறு தோட்டத்து வீட்டுக்கு நடந்து சென்றேன். கல்லூரியின் இறுக்கமான விதிகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். விடுதியின் வசதிகள் பற்றியும், யார் அவள் அறைத் தோழி என்றும் விசாரித்தேன்.

‘நந்தன்,’ என்றாள்.
‘என்னது?’
‘கல்யாணம் ஆயிட்ட மாதிரி boyக்கும் கேர்ல்க்கும் ஒரே ரூம் குடுத்துட்டாங்கப்பா.’
பின் என் அதிர்ச்சியைக் குறைக்கத் தலைப்பட்டாள்.
‘ஆனா, அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னு நான் போராடினேன். அப்புறம் எனக்கு வேற ஃப்ரெண்ட் குடுத்தாங்க. அவ பேரு கிருத்திகா. நல்ல பொண்ணுப்பா.’
‘அப்ப சரி.’
‘எனக்கு மட்டும் தான் கேர்ல் கேர்ல். மத்தவங்களுக்கெல்லாம் உடனே மாத்துல. ரொம்ப நாள் போராடுனதுக்குப் பின்ன இப்பத்தான் மாத்தியிருக்காங்க.’ (மகளைப் பெற்ற அப்பா என்பதால் பாவம் பையன்கள் என்ற கண்ணோட்டம் தோன்றவில்லை.)

என் போராளி மகளை, பசிக்கிறது, அம்மா ஆண்டாள் பேச்சு கேட்கப் போய்விட்டாள் என்று சொல்லி, சமையலறைக்கு அனுப்பி வைத்தேன்.

கல்லை நுணுக்கித் தாளில் சுற்றித்தந்த சப்பாத்தி ரோல் சுவையாகவே இருந்தது.

‘இன்னும் LKG மாதிரி God’s Love பாட்டுத்தான் ப்ரேயர்ல பாடுறாங்க. தமிழ்ப் பாட்டே பாடறதில்லை. தமிழ் மீடியம்னா ஃபீஸ் அதிகம்பா,’ என்று அலுத்துக் கொண்டாள்.
‘சரி வா. நாம இங்க தமிழ்ல கவிதை படிக்கலாம்.’ எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு பாதுகாப்புக்காக தேவதேவனின் ‘விண் வரையும் தூரிகைகள்’ கவிதைத் தொகுப்பு எடுத்து வந்திருந்தேன். தலைவலியோடு திரும்பிய அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

‘கொக்கு’ கவிதை அவளுக்கு விளக்க வாகாக இருந்தது.

நிலைநின்ற நிலையால்
கன்றிச் சிவந்த கால்களும்
இடையறாது கழுவிச் செல்லும் நீரால்
வெண்மை கொண்ட உடலுமாய்
கொக்கு;
நமக்கு தேவதைகளை ஈன்றளித்த தாய்.
சிறகு விரித்தால் வானுலகு
சிறகு குவித்தால் நீர் விரிப்பு.
புழுவையும் பறவையாக்கும்
செயலே உயிர்வாழ்வு.

ஆண்டாள் உரை முடிந்ததும் தரைக்குத் திரும்பினேன்.

பின்னூட்டமொன்றை இடுக