அந்தச் சிலையை வைத்துவிடுங்கள்.
அந்தச் சிலையை வைக்கவேண்டும்
என்பதற்குச் சொல்லப்படும் பசப்புவாதங்களைவிட
அந்தச் சிலை எதையும் குலைத்துவிடப் போவதில்லை.
அந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்.
அந்தப் புத்தகத்தை எரிக்கவேண்டும்
என்பதற்குப்பின் பொதிந்த நோக்கங்களைப் பொசுக்க
அந்தப் புத்தகத்தின் சாம்பல் பயன்படக்கூடும்.
எல்லாம் விரைவாகவே நடக்கட்டும்.
துவேஷங்கள் வெளிச்சத்துக்கு வரட்டும்.
வேஷங்களோடு மன்றாடுவதைவிடச்
சலிப்புதரும் செயல் வேறில்லை.
நீங்கள் கட்டியும்வெட்டியும்ஒட்டியும்எரியூட்டியும்
பொய்மையைக் கொண்டு
வாய்மையின் வாயை அடைக்கமுடியுமானால்
வாய்மை எனப்படுவதுதான் எதற்கு?