(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்தது.)
அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவிகளுமே உலகத்தையும் அதன் சுமையையும் சுமப்பது போன்ற ஒரு சித்திரத்தை அளித்த நாவல் அது. அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சித்திரத்தை வரைகிறது இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. சமூகத்தின் அடிநிலை மக்களின் முதுகில் ஒய்யாரமாய் அமர்ந்தே இந்தச் சமூகம் தன் சுகமான பயணத்தை மேற்கொள்கிறது. பலசமயங்களில் சுமையென்று கருதாமலே அவர்கள் இயல்பாகச் சுமக்கவும் செய்கிறார்கள்.
கோவேறு கழுதைகள் தலித் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள்ளெல்லாம் அடைபடாமல், என் பார்வையில், ஒரு மகத்தான இலக்கிய நூலாக மிளிர்கிறது.
படித்த, நடுத்தர, நகரத்து மக்களின் பார்வைக்கும் எட்டாத ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. ஆரோக்கியம் என்கிற ‘பற வண்ணாத்தி’தான் நாயகி. மேல் சாதியினர்க்கும் கீழ்ச்சாதியினர்க்குமான உரசல்களைப் பற்றியதல்ல இமையத்தின் இப்படைப்பு. இந்தியச் சமூக அடுக்கின் அடிநிலையிலும், மேலும் பல அடுக்குகள் இருப்பதை இந்நாவல் வெளிக்கொணர்கிறது. (அதனாலேயே இது வெளிவந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது என்பதையும் அறிகிறேன்.) அடிநிலை மக்களின் முதுகில்தான் மேற்சாதியினர் பயணிப்பது என்பது ஒரு பொதுப்புரிதல். ஆனால, அந்தப் பொதுப்புரிதலைத் தாண்டி, அந்த அடிநிலை மக்களுக்கும் சுமைதாங்கியாய் இன்னுமொரு சமூகம் இருப்பதை நம் மூடிய கண்களுக்குள் காட்சியாக்குகிறார் இமையம். அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கும், ‘முண்டப் பயலே’ என்றழைத்து அதட்ட யாராவது இருக்கிறார்கள்; யாராவது தேவைப்படுகிறார்கள்.
அந்த கிராமத்தின் சமூக அடுக்கினை அக்கிராமத்தின் வடிவமைப்பே விளக்கிவிடுகிறது.
காலனியிருப்பது சற்றுச் சாய்வான பள்ளமான பகுதியில். ஆரோக்கியத்தின் வீடு அதைவிடப் பள்ளமான பகுதியில். ஆனால் நீர் வெளியேற சாய்கால் கொண்ட இடம். குடித்தெரு அவ்வளவு மேட்டுப்பகுதியில் இல்லையென்றாலும் மேடான இடத்தில்தான் இருந்தது.
ஆரோக்கியம் ஒரு பெரும் சமூக மாற்றத்தின் சுழலில் சிக்கித் தவிக்கிறாள். பல தலைமுறைகளாக மாறாதிருந்த ஓர் அமைப்பு அவளது காலத்தில் ஆட்டம் காண்கிறது. அந்த மாற்றங்கள் அவள் வாழ்வை அலைகழிக்கின்றன.
யதார்த்தமாகச் சொல்லப்பட்ட ஒரு கதையின் மூலமாகப் பல எதிர்நிலைகளைக் கட்டமைக்கிறார் இமையம். தன் கடந்தகால வாழ்க்கையை எண்ணியெண்ணி ஏங்குகிறாள் ஆரோக்கியம். அந்த ஏக்கம் நமக்கே பிடிக்காமல் நம்மையும் பீடிக்கிறது. ஆனால், அதே வேளை, அந்தக் கடந்த காலமும் அப்படியொன்றும் போற்றத்தக்கதாய் (நம் பார்வைக்கு) இல்லை. அவள் நிகழ்காலமும், எதிர்காலமும் அதைக்காட்டிலும் அதிகமாய் இருள்கவிந்திருக்கின்றன என்பதுதான் கடந்து காலத்தை உயர்த்திக் காட்டும் ஒரே காரணம். கடந்த காலச் சமூகச் செயல்பாடுகளின் விளைவுகளையும் சேர்ந்தே ஆரோக்கியமும் சவுரியும் சுமக்கிறார்கள். ஆசிரியர் குரல் என்று எதுவும் உரக்கக் கேட்பதேயில்லை. முழுக்க ஆரோக்கியத்தின் பார்வையிலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.
ஆரோக்கியமும் பிறரும் பேசும் மொழி, பழக்கப்படாத நம் செவிகளில் பெரும்பாலும் வசைமொழியாகப் படுகிறது. ஆனால், அந்த வசைமொழிகளின் ஊடே, அவர்களின் உள்ளத்திலிருக்கும் பேரன்பினை உணரச் செய்ய முடிவதும் ஒரு பெருந்திறன்தான். எத்தனைதான் வசைகள் நிறைந்திருந்தாலும், வழக்குமொழியில் ஒரு தாளநயம் தொடர்ந்து தொனிக்கிறது.
“ஆரா மீனுக்கும், கொரல மீனுக்கும் நடு ஏரியில் சண்ட. விலக்கப் போன விரா மீனுக்கு உடைஞ்சுபோச்சாம் மண்ட.”
ஆரோக்கியம் களத்து மேட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வைக்கோலுக்குப் பின்புறமிருந்து இரண்டு கருத்த நிழல்கள் வெளியே வருவதைக் கண்டாள். பிறகு வீட்டிற்கு வேகமாக நடந்தாள்.“வரட்டும், இன்னிக்கு வூட்டுல வுடக்கூடாது.”
இப்படியே இருக்க வேண்டியதுதானா?சமையற்காரனின் கேள்வி ஆரோக்கியத்திற்குப் பிடிபடவில்லை. எதற்காக இப்படியொரு கேள்வி கேட்கிறான். […] தன் வாழ்க்கையை, குடும்பத்தை, செய்யும் தொழிலைக் கேவலமானதாக்க் கருதித்தான் இப்படியெல்லாம் கேட்கிறான் என்று எண்ணிய ஆரோக்கியம் தன் வாழ்க்கை கேவலமானதுதானா என்று முதன்முறையாக எண்ணியவள் திடீரென்று குலுங்கி அழுதாள்.
“கட்டியிருக்கிற சேலைக்குள்ளார என்னா இருக்குனு ஒவ்வொரு வூட்ல ஆம்பளையும் மொறச்சிப் பாக்கறானுவ…அவனுவோ வூட்ல போயி துணியெடுக்கணுமா?”
ஊருக்கும் வண்ணான் சக்கிலியக்குடிக்கும் இடையே கருவேலங்காட்டைப் பிளந்து ஒருபாதை இருக்கிறது. அது கொடிபோல் வளைந்து, நெளிந்து இருக்கும். ஒரு ஆள் மட்டுமே நடக்க வசதியான பாதை. இது மழைக்காலத்தில் முழங்கால் வரை சேறு வாங்கும். ‘சதக், புதக்’ கென்றுதான் நடக்கவேண்டும். வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இந்தப் புதருக்குள் பன்றிகளின் உறுமல், நாய்களின் குரைப்புக் கேட்கும். சில இரவுகளில் நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்கும். இந்தச் சத்தமெல்லாம் ஆரோக்கியம், பெரியான் குடும்பத்து நபர்களை ஒன்றும் செய்யாது.
பட்டேன் ஒரு கோடிபாடுபட்டேன் முக்கோடிஎழுதி வெச்சிப் பாக்கியில்லேஎஞ்சினது ஒரு முயக் கோடித்துணி—-*—-எட்டுக்கால் நடந்து வரும்ரெண்டுகால் நீட்டியிருக்கும்சட்டியிலே நெருப்பு வரும்சாதி சனம் கூட வரும்கொட்டு மேளம் கொட்டி வரும்கோடி சனம் கூட வரும்மற்றவர்கள் மனம் கலங்கிமவுன மாலை போட்டு வரும்எட்டுக்கால் நடந்து வரும்ரெண்டுகால் நீட்டியிருக்கும்
மருந்தப் போடுறன், மாயத்தப் போடுறன்னு என்னத்தயோ கொண்டாந்து காட்டுல கொட்டுறானுவ. சோத்தத் தின்னா ருசியாவா இருக்கு? புள்ளெ உண்டாயி இருக்கிற பொம்மனாடிவோ களிமண்ணப் புட்டுப்புட்டுத் திம்பாளுங்க. அதுலகூட ஒரு மணம் இருக்கும். ஒரு ருசி இருக்கும். இந்தச் சோத்தத் தின்னா எந்தப் பயலுக்குத் தெம்பிருக்கும்?
முன்பு மழை இல்லாமலிருந்தால்தான் பஞ்சம் ஏற்படும். இப்போது நிலைமை வேறு. முன்பு காடுகளாக இருந்தவற்றை எல்லாம் சீராக்கிப் பயிர் நிலமாக்கியும் உணவுப் பொருள் கிடைக்கவில்லை. கண்ணில் தென்படும் திசையெல்லாம் சவுக்கு, யூகலிப்டஸ் மரங்களாகத்தான் தெரிகின்றன. ஊரில் நிரந்தரப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. என்றென்றும் நீங்காப் பஞ்சம்.“இந்த வருசம் சனங்க, கனமா பருத்திய இம்புட்டு ஊணித் தள்ளுறாங்களே, சோத்துக்கு என்ன பண்ணுங்க?பணப்பயிரு செய்யுறாங்க. மய இல்ல. அதனால் பருத்திப் பணத்துக்குச் சோத்துக்கு வாங்கி நெல்லுச் சோறாத் திம்பாங்க.அட யாங் கடவுளே! அநியாயத்துக்கு எல்லா ஊட்டிலும் பருத்தியா?”