விழித்திருந்த இரவினிலே

உடல் சாய்ந்தவுடன் கண்சாய்ந்துவிடும் எனக்கு

அரிதாய் வாய்க்கும் சில உறக்கமற்ற இரவுகள்.

அப்போதுதான் தெரிகிறது

அருகிலுறங்கும்

அவள்

தளிர்க்கரங்கள் மார்மீது விழுவதுவும்,

மென்முகம் என்முகத்தோடு இணைவதுவும்,

இசைபாடும் அவள் சுவாசத்தின் இளஞ்சூடும்,

மடிமீது படர்ந்திடும் அவள் சிறுபாதமும்,

உடலெங்கும் பரவிடுமோர் பரவசமும்

எனக்கெனக் கென்றேங்கும் முழங்காலும் அதன்கீழும்,

மனதினிலே அரும்பிடுமோர் பெருங்கனிவும்

ஆற்றொழுக்காய் ஊற்றெடுக்கும் கவிச்சொல்லும்

மறக்குமுன்னே பதியவெண்ணும் படபடப்பும்

எழுந்துவிட்டால் இதையிழப்போ மெனும்பதைப்பும்

இடையிடையே இடைவருடும் அவளுதைப்பும்

அப்பப்பா!

முகம்திருப்பி அவள் தேன்னுதலில்

இதமாகப் பதிக்கின்றேன் என்னிதழை.

இன்று மட்டும்

என்னைக் கொஞ்சம் விழிப்பில் வைத்தால்

வணங்குவேன் தாயே!

5 Responses to விழித்திருந்த இரவினிலே

  1. kathirmuruga சொல்கிறார்:

    “..எழுந்துவிட்டால் இதையிழப்போ மென்னும்பதைப்பும்
    இடையிடையே இடைவருடும் அவளுதைப்பும்
    அப்பப்பா!..”
    அருமையான வரிகள்.

  2. Thiru சொல்கிறார்:

    பெற்ற மனத்தைப் பித்தாக்கும் பிஞ்சு …..எத்தனை அற்புதம்

  3. Saravanan சொல்கிறார்:

    Padikkum pothu than therigirathu vizhithiruthal evalavu arithanathenru.Arumaiana pathivu.

பின்னூட்டமொன்றை இடுக