விமர்சர்களின் வேலை மிகச் சுவையானது என்று எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால் அது எவ்வளவு துயரமயமானது என்பது இப்போது தான் புரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு நல்ல விமர்சகர் நல்ல அறிவாளியாக, விமர்சக்கிற விஷயத்தைப்பற்றி ஞானமுள்ளவராக இருக்க வேண்டும். இன்றேல் விமர்சனம் வலுவற்றதாய், மேலோட்டமானதாய் இருக்கும். அத்தகைய விமர்சகர்களை வாசகர்களும், படைப்பாளிகளும் மதிக்கப் போவதில்லை.
தமிழ் இலக்கிய உலகில் கவனிக்கத் தக்க, பாரபட்சமற்ற விமர்சகர்கள் இருப்பதாய்த் தெரியவில்லை. என் அறியாமையாகவும் இருக்கலாம். திரைப்பட விமர்சகர்கள் – மதன், சுஹாசினி போன்றவர்கள் தொலைக்காட்சியின் தயவில் உருவாகியிருக்கிறார்கள். இருவரும் நல்ல ஞானமுள்ளவர்கள். அறிவாளிகள் மாதிரித்தான் தெரிகிறார்கள். இவர்களின் விமர்சனங்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் படியே இருக்கின்றன.
என் கேள்வி இதுதான். வாராவாரம் எப்படி இவர்களால் இத்தனை திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது – பெருமளவில் மோசமான திரைப்படங்களே வெளிவருகிற நிலையில், அறிவுஜீவிகளாகப் பாவிக்கப்படுகிற இவர்களால் எப்படி இவ்வளவு மட்டமான படங்களை முழுவதுமாய்ப் பார்த்து அலச முடிகிறது? காளை, பழனி மாதிரியான படங்களைப் பார்க்க வேண்டிய கட்டாயக் கொடுமைக்கு ஆட்படுவதைக் காட்டிலும் வறுமையை விரும்பி அணைத்துக்கொள்ளலாம்.
நான் விமர்சகனாக வேண்டியிருந்தால், நானாய்த் தேர்ந்தெடுத்துப் பார்க்கிற படங்களையும், படிக்கிற புத்தகங்களையும் மட்டுமே விமர்சிக்கும் வாய்ப்பு வேண்டும். நம் எதிர்பார்ப்புகள் எல்லா சமயங்களிலும் சந்திக்கப்படப் போவதில்லை – பின் விமர்சனமே தேவையில்லை. ஆனால் நிச்சயமாய் எதிர்பார்க்கக்கூட எதுவும் இல்லை என்று தெரிந்தே தரமாயிருக்க வாய்ப்பேயற்ற ஒரு படைப்பை நல்ல விமர்சகன் அலசவேகூடாது.
1:48 பிற்பகல் இல் ஜனவரி 21, 2008 |
[...] - விமர்சனம் என் ‘விமர்சனம் பற்றிய விமர்சனம்’ இடுகையில் சொன்ன கருத்திலிருந்து [...]